வெள்ளி, 9 ஜூன், 2017

திங்கள், 19 மார்ச், 2007

கடவுளின் நிறுவனம்

குடிப்பதற்கு ஓரளவு மதுவும்
கடிப்பதற்கு ஒரு துண்டு இறைச்சியும் கிடைத்துவிட்டால்
புணர்ச்சிக்கு வீடு திரும்பிவிடுகிறான் கவிஞன்
சமைப்பதற்கும் உறங்குவதற்கும்
சொந்தமற்ற நான்கு சுவர்களைக் கொண்டிருக்குமவன்
அதிலிருந்து வெளியேரும் நீண்ட கால்களால்
உலகத்தை விரித்துக்கொண்டு போகிறான்
அவன் கண்கள்செல்வச் செழிப்புள்ள
கருவூலங்களை ஊடுருவிச் சென்று
அப்பாலுள்ள நிலவை இலவசமாய்ப் பகிர்ந்து நிற்கிறது
கவிஞன் கரைமீது நடக்கும்போது
பசித்தவர்களின் பேரோசைகளையே கற்பிதம் செய்கிறான்
விளிம்பில் நின்று நிலத்தை அதட்டும் அவன் குரலால்
மிச்சமான பண்டங்கள் யாவும்
வெளியில் தெறித்து விழுகின்றன
அவன் சிரித்துக்கொள்கிறான்
இந்த கடவுளின் நிறுவனத்தில்
வெலை மறுத்தும் விசுவாசமற்றும் அவன் திரிவதுவேடிக்கையானது மட்டுமல்ல விபரீதமானதும்தான்
உழைப்பவர்கள் தங்கள் வயிற்றை காட்டும்போது
அந்தப் பைத்தியக்காரன் தற்கொலை செய்துகொள்ளும்படி
அவர்களுக்கு ஒரு ஆழ்ந்தபள்ளத்தாக்கையல்லவா
முன்மொழிகிறான்
அப்படித்தான் இரண்டு கை நிறைய
புளியவிதைகளைக் கொடுத்துவிட்டு
ஒரு இறக்குமதி பானத்தைக் கேட்டு அடம்பிடித்ததும்
சற்றே ஏமாற்றுக்காரனைப்போல் தென்படும் அவனுக்கு
நீங்கள் ஏதேனும் அறிவுரை கூற முயலும்போது
உங்களிடம் ஓரளவு மதுவும்
ஒரு துண்டு இறைச்சியும்
உபரியாக இருந்தால் தொலைத்துவிட்டுப் பேசுவதுதான்
சிறந்த உபாயம்
பிறகு அவனிடம்
உதவாக்கரைகளுக்காக
கடவுள் தன் நிறுவனத்தை திறந்து போடுவாரா
என்று கேளுங்கள்
போடமாட்டார் என ஒப்புக்கொள்வான்
-யவனிகா சீறிராம்


கடவுளின் நிறுவனம் என்ற தொகுப்பிலிருந்து

செவ்வாய், 13 மார்ச், 2007

உன்னிடம் விடைபெற்றுக் கொண்ட
பின் உன் தோள்களில் உணர்ந்திருப்பாய்
என் நேசப் பறவைகளை
நான் வரும் போது அழைத்து வந்திருந்தேன்
என்னுடன் உன் நினைவுகளின்
அரூபத்தை
என் மனதில் துடிதுடித்து உயிர்த்தெழும்
என் உணர்வுகளை தின்று தீர்த்துக்
கொண்டிருக்கிறது உன் அருபம்
உன் மௌன புன்னகைகளை தானியங்களாக்கி
உணவிடு உன் அறையில் இருக்கும்
என் நேசப் பறவைகளுக்கு

வியாழன், 8 மார்ச், 2007

இறுகும் அதிகாரத்தின் கைகள்

பாதி வெப்பமும் பாதி குளிர்ச்சியுமான
விசித்திர இயல்புடையது இந்நகரம்
அதிகரத்தினால் நிறைந்திருக்கிறது இந்நகரம்
அதிகாரம் இதுவரை எந்த நகரத்தையும்
வென்றதில்லை
அதன் ஆன்மாவை பிடித்து அதன் வளங்களை
உறிஞ்சி விடும் இயல்புடையது
விளையாட்டு பெரும் போராய்
உணரப்பட்டதில் அதிகாரத்திற்கு
பங்குண்டு
தேசதுரோகிகளின் பட்டியல் அதிகாரத்தினால்
தயாரிக்கபடுகிறது அது நீண்டதாயும்
முடிவற்றதாயும் இருக்கிறது
அதிகாரம் தேசியம் தேசியம் என்று
கத்திக் கொண்டே இருக்கிறது
அதிகாரம் தன்னை தக்க வைக்க
நகரெங்கும் படைகளை அனுப்புகிறது
படைகளால் கொல்லப்பட்ட உடல்கள்
நகர எல்லைகளில் குவிகின்றன
காணாமல் போன குழந்தைகளின் பெற்றோர்
இரவுகளை அழுதுகொண்டே கழிக்கிறார்கள்
படைகளால் வண்புணரப்பட்ட பெண்களின்
எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது
நகர வீதிகளில் தாய்மார்கள் தங்களையும்
வன்புணரும்படி அதிகாரத்திற்கு எதிராய்
கூக்குரலிடுகிறார்கள்
அதிகாரத்தின் கண்கள் அதை
காணாது முடிக்கொள்கின்றன
மனித உரிமை பற்றி
பேசுவது அதிகாரத்திற்கு பிடிப்பதில்லை
அதிகாரத்தின் மனசாட்சியை திருப்திபடுத்த பலரும்
சிறையில் அடைக்கப்படுகிறார்கள்
தூக்கிலிடபடுகிறார்கள்
அனைத்தும் சரியாக அதிகாரம்
உங்களை கனவு காணசொல்கிறது
அதிகாரத்தின் புனித வாய் உங்களை ஆசிர்வதிக்கிறது
"அவா அவா கடமையை அவா அவா செய்யுங்கோ"
அதிகாரத்தின் வளர்ப்பு நாய்கள் நகரில் அதிகம்
அவை ஜனாதிபதியாகவும், பிரதம மந்திரியாக்கவும்வலம்
வருகின்றன
அதிகாரத்தின் கண்கள் உங்களை உற்று நோக்குவது
உங்களுக்கு தெரியாது அது உங்கள்
மென்னியை பிடிக்கும் வரை
மெல்ல மெல்ல அனைத்தையும் நீங்கள்
இழந்து விட்ட பின்னும் உங்கள் குரல்வளை பிடித்து
இனி இறுகும் அதிகாரத்தின் கைகள்

புதன், 7 மார்ச், 2007

உன் வீடு

நேற்று பெய்த மழையில்
நசநசத்து போயிறுக்கும்
நீ இல்லாத உன்
வீட்டைதேடி தவித்த
என்காலடித் தடங்கள்.